மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க., தலைவர்: ராமதாஸ் பேட்டி

25

விழுப்புரம்: ''எனது மூச்சு காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:


நேற்று தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவரது செயல்பாட்டை பார்க்கும் போது எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.


மிகவும் வருத்தம்
நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்து இருக்கிறேன். ஆனால் மாநாட்டிற்கு பிறகு, நடக்கும் செயல்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் எனக்கு கட்சியினர் ஆதரவை வழங்குகின்றனர். நேற்று தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவி கொடுப்பேன் என்று சொன்னதற்கு 100க்கு 99 சதவீதம் பேர், அப்படி சொல்ல கூடாது என்று சொன்னார்கள்.


மூச்சு காற்று

கடைசி வரை ஐயா தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று 100க்கு 99 சதவீதம் பேர் சொல்கிறார்கள். மீதமுள்ள 1 சதவீதத்தை குடும்பத்திற்கு விட்ருங்கள். என்னுடைய மூச்சு காற்று நிற்கும் வரை தலைவர் பதவியில் நான் இருப்பேன். அதாவது எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வர கூடாது என்று, கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.



ரத்த அழுத்தம் எகிறுகிறது
அன்புமணியை பார்த்தால் எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.கட்சி நிர்வாகிகள் கூறியதால், 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் அன்புமணி விருது வாங்கினார். தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும். அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.



தந்தை, தாயை மதிக்க வேண்டும். அவர்கள் சொல் படி கேட்க வேண்டும். தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை அவரிடம் சொன்னால், நான் மகிழ்ச்சியாக தான் வைத்து இருக்கிறேன் என்று சொல்வார். மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை தூக்கி தாயை அடிக்கிறார். இது மகிழ்ச்சியாக வைத்து இருப்பதா?


தூக்க மாத்திரை
யார் ஆரம்பித்த கட்சி. தனி ஒரு மனிதனாக சுயம்பு என்று சொல்வார்கள். தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு, பகலாக சென்று நான் பட்ட பாடு சொல்லி மாளாது. 100 ஆண்டுகள் இருப்பீங்க என்று சொல்லி விட்டு மார்பிலும், பின்னாடியும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திட்டு இருக்கிறார். தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை.




ஒரே தீர்வு

அவரை நினைக்கும் போது எல்லாம் வலி ஏற்படுகிறது. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல. அது எல்லாம் போய்விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால் அது பொய் என சொல்கிறார். ஒரே தீர்வு செயல் தலைவராக இருக்கிறேன். ஐயா சொல்வதை கேட்கிறேன் என்று கூறுவது தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement