மனைவியின் அஸ்தியுடன் இந்தியா வந்த கணவர்: விமான விபத்தில் உயிரிழந்த சோகம்

புதுடில்லி: மறைந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரது அஸ்தியை இந்தியாவில் கரைத்து விட்டு மீண்டும் ஊர் திரும்ப முயன்ற கணவர் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் குஜராத்தின் மாஜி முதல்வர் விஜய் ரூபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


தரையில் விழுந்து விமானம் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான அர்ஜூன் படோளியா என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இவருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி பாரதிபென் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்தார். பாரதிபென்னின் அஸ்தியை இந்தியாவில் கரைக்க வேண்டும் என்பது மனைவியின் கடைசி ஆசையாகும்.
அந்த ஆசையை நிவர்த்தி செய்வதற்காக, அஸ்தியுடன் சொந்த ஊரான குஜராத்துக்கு வந்த அவர், நர்மதா ஆற்றில் அதனை கரைத்து விட்டு, மீண்டும் லண்டன் திரும்பியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விமான விபத்தில் அர்ஜூன் படோளியாவும் உயிரிழந்தார்.



ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தந்தையையும், தாயையும் இழந்த இரு குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அதேபோல, கேரளாவைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண் லண்டனில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கேரளாவில் அரசு வேலையில் சேர இருந்த நிலையில், அவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

Advertisement