ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உள்ளது.
ஈரானில் "Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானில் அணுநிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேநேரத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து இஸ்ரேல் அவசரநிலையை அறிவித்தது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 12%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது. போர் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உற்பத்தியை பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகும்.






