14 மணி நேரம் ஈ.டி., 'ரெய்டு' காங்., புள்ளிகள் கலக்கம்

பெங்களூரு: 'வால்மீகி' மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் 14 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரசில் சில முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கர்நாடக அரசின் பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம், எம்.எல்.ஏ.,க்கள் நாகேந்திரா, பரத் ரெட்டி, கணேஷ், சீனிவாஸ் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம், சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் சிக்கிய சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. முறைகேட்டில் ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவருமான பசனகவுடா தத்தல், அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதால், தத்தல் உள்ளிட்ட காங்கிரஸ் புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மக்கள் ஆசி



சோதனை குறித்து எம்.எல்.ஏ., பரத் ரெட்டி நேற்று அளித்த பேட்டி:

என் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ஒரு காகித துண்டு அல்லது ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை. நான் செய்து வரும் தொழில் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய பதில், ஆவணங்களை அளித்தேன். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு பற்றியும் என்னிடம் விசாரித்தனர்.

என் வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் அனைத்தும் பொய். அரசியல் என்றாலே சதி தான். எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக சதி செய்கின்றன. சிறிய வயதில் நான் எம்.எல்.ஏ.,வாக இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எங்கள் கட்சி தலைவர்கள், எங்களுடன் உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரி துறை குறி வைப்பது இந்த நாடு முழுதும் அறிந்ததே. விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு சம்மன் கொடுக்கவில்லை. மக்கள் ஆசிர்வாதத்தால் வெற்றி பெற்றேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement