குடி பழக்கத்தால் ஐவர் பலி கிராம பெண்கள் ஆவேசம்

பாகல்கோட்: கலால் துறை அமைச்சர் திம்மாபூரின் சொந்த மாவட்டத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து, ஒரே மாதத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக, பெண்கள் எச்சரித்துள்ளனர்.

பாகல்கோட், கலால் துறை அமைச்சர் திம்மாபூரின் சொந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பான் ஷாப் உட்பட, சில்லரை கடைகளிலும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

பாதாமி தாலுகாவின், ஹலகுர்கி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம், கள்ளச்சாராயம் விற்கின்றனர். அதிகாலை 5:00 மணிக்கு கடைக்குச் சென்று கேட்டாலும், மது கிடைக்கிறது. எளிதில் மது கிடைப்பதால், இளைஞர்கள் குடிப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். தரமற்ற மது அருந்தியதால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரே மாதத்தில் உயிரிழந்தனர்.

கணவரும், மகனும் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுப்பதாக, கிராமத்தின் பெண்கள் கண்ணீர் சிந்துகின்றனர். உழைத்து சம்பாதிக்கும் பணத்தை, குடிக்கே செலவிடுகின்றனர். கிராமத்தில் கள்ளச்சாராயம், மது விற்பதை கட்டுப்படுத்தினால், ஆண்களின் குடிப்பழக்கம் குறையும். இதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கலால்துறை அதிகாரிகளிடம் மன்றாடியும் பலன் இல்லை.

எனவே கிராமத்தினரின் வலியுறுத்தலுக்கு பணிந்த கிராம பஞ்சாயத்து, 'கிராமத்தில் யாரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்கக் கூடாது. விற்றால் போலீசாரிடம் பிடித்து கொடுக்கப்படும்' என, தண்டோரா போட்டு எச்சரித்துள்ளது.

கிராமத்தில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த, கலால்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தீவிர போராட்டம் நடத்தப்போவதாக பெண்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement