பேட்மின்டன் பயிற்சி மையம்

பிரபல நடிகை தீபிகா படுகோனே, 39. இவரது தந்தை பிரகாஷ் படுகோனே, 70. இந்திய அணியின் முன்னாள் பேட்மின்டன் வீரர் ஆவார். இவருக்கு கடந்த 10ம் தேதி பிறந்தநாள் ஆகும். இந்நிலையில், தந்தையின் பிறந்தநாளை ஒட்டி தீபிகா படுகோனே, சமூக வலைதளங்களில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், 'தந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பெங்களூரு உட்பட நாடு முழுதும் 18 நகரங்களில் 75 பேட்மின்டன் பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளோம். இந்த ஆண்டிற்குள் 100 மையங்களையும், அடுத்த மூன்று ஆண்டிற்குள் 250 பேட்மின்டன் மையங்களை அமைப்பது, எங்கள் இலக்கு' என்று கூறி உள்ளார்.

இதன்மூலம் பெங்களூரில் கூடிய விரைவில், பேட்மின்டன் பள்ளியை தீபிகா படுகோனே அமைக்க இருப்பது தெரிந்து உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனராக தீபிகா இருப்பார். வழிகாட்டி, ஆலோசகராக பிரகாஷ் செயல்படுவார்.

'என் தந்தை பேட்மின்டன் விளையாடுவதை பார்த்து நான் வளர்ந்தேன். பேட்மின்டன் விளையாட்டு தனிநபரின் வாழ்க்கையை உடல், மன, உணர்ச்சிரீதியாக எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை நான் நேரில் பார்த்து உள்ளேன். படுகோனே பேட்மின்டன் பள்ளி மூலம் மகிழ்ச்சி, ஒழுக்கம் பற்றி மக்களுக்கு கற்பிக்க விரும்புகிறோம்.


'எனக்கு பேட்மின்டன் விளையாடுவது பிடிக்கும். அந்த விளையாட்டு வீராங்கனையாக நான் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு மாடலிங் துறை பிடித்ததால் நடிகையாக உள்ளேன். எனது தந்தைக்கு பேட்மின்டன் மீது உள்ள ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆசைப்படுகிறேன்' என்றும், தீபிகா படுகோனே சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்

- நமது நிருபர் -.

Advertisement