சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மாவட்டத்தில் 180 முகாம் நடத்த இலக்கு

நாமக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின், கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் வகையில், 'சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்' நடத்த உத்தரவிட்டுள்ளார்.


நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, தாது உப்பு கலவை, முகாமில் கலந்து கொண்ட கன்றுகளில், சிறந்த கிடேரி கன்றாக தேர்வு செய்யப்பட்ட, மூன்று உரிமையாளர்களுக்கு பரிசு, மூன்று கால்நடை வளர்ப்போருக்கு சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்கான விருது வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

2025-26ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில், ஒரு ஒன்றியத்திற்கு, தலா, 12 முகாம்கள் வீதம், 15 ஒன்றியங்களில், 180 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாமானது, வரும், செப்., வரை, ஒரு ஒன்றியத்திற்கு, ஆறு முகாம்கள் வீதம், 15 ஒன்றியங்களுக்கு, 90 முகாம், அக்., முதல், 2026 மார்ச் முடிய, ஒரு ஒன்றியத்திற்கு, ஆறு முகாம்கள் வீதம், 15 ஒன்றியங்களுக்கு, 90 முகாம்கள் என, மொத்தம், 180 முகாம்கள் நடத்தப்படுகிறது.
முகாம்களில், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை, சினை பரிசோதனை செய்தல், வெறிநாய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், உதவி இயக்குனர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement