19ல் அங்கக வேளாண் என்ற தலைப்பில் இலவச பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு



நாமக்கல்: 'வரும், 19ல் அங்கக வேளாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 19 காலை, 10:00 மணிக்கு, 'அங்கக வேளாண்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. பயிற்சியில், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், திட மற்றும் திரவ நொதித்த இயற்கை எரு பயன்படுத்துதல், அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், பஞ்சகாவியம், மீன் அமிலம், பண்ணை கழிவுகளான ஆடு, மாடு தொழுவத்தின் கழிவுகள், களைகள், கோழி எரு, தென்னை நார்கழிவு, பார்த்தீனிய களைச்செடிகள் ஆகியவை எளிதில் மட்கக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் பயன்படுத்துதல், அங்கக முறையில் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, மண் மூடாக்கு அமைத்தல், பயிர் சுழற்சி முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.
அதில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும், 40 விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், வரும், 18 மாலை, 5:00 மணிக்குள், 04286--266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement