பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பிடம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நாள் முதல், அங்கு கடை வைத்து நடத்த ஏலம் எடுத்தவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பஸ் ஸ்டாண்ட் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வரும், 30க்கும் மேற்பட்ட பஸ்கள், பயணிகளை இறக்கி விட்டவுடன் சென்று விடுகின்றன. இதன் காரணமாக வளர்ச்சியின்றி உள்ளது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் கட்டன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்காமல், தற்போது யாருக்கும் பயன்படாதபடி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சிறுநீர் கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். கழிப்பிடத்தை சுற்றி சுகாதாரமின்றி உள்ளது. டவுன் பஞ்., நிர்வாகம் வாரத்திற்கு ஒரு முறையாவது பணியாளர்களை வைத்து சுத்தம் செய்து, பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.