பாரம்பரியமான ஹயக்ரீவா

இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. வாயில் நீர் வடியும். நம் நாட்டில் பல வகையான இனிப்புகள் உள்ளன. இவற்றில் 'ஹயக்ரீவா'வும் ஒன்றாகும். இதை சாப்பிட்டால், சாப்பிட்டுக் கொண்டே இருக்க தோன்றும்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
திராட்சை - ஒரு ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை கழுவி, ஐந்தாறு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். இதை குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்தில் போட்டு மிருதுவாக வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் துாள் போட்டு கலக்கவும்.
அதன்பின் வேகவைத்த கடலைப்பருப்பை, வெல்ல கலவையில் சேர்த்து ஐந்தாறு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, நன்றாக கிளறவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, வெல்லம், கடலைப்பருப்பு கலவையில் சேர்த்தால், கம கமக்கும் ஹயக்ரீவா இனிப்பு தயார். இதன் வாசமே வீட்டை துாக்கும்.
- நமது நிருபர் -