பா.ம.க.,வில் வலுக்கும் அப்பா - மகன் சண்டை; பொதுக்குழுவுக்கு ஆள் பிடிக்கும் அன்புமணி



பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதலின் உச்சகட்டமாக, பொதுக்குழுவை முதலில் யார் கூட்டுவது என, இரு தரப்பும் தீவிர ஆலோசனையில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கட்சியை நான்தான் உருவாக்கினேன்; வளர்த்தேன் என்று நிறுவனர் ராமதாஸ் கூறினாலும், கட்சியில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் தான் உள்ளனர்.

பூஜை அறை



அதனால், தனக்கான ஆதரவை பலப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ராமதாஸ் களம் இறங்கி இருக்கிறார். அதற்காக, அன்புமணி பக்கம் இருக்கும் நிர்வாகிகளை, நைச்சியமாக பேசி, ராமதாஸ் பக்கம் அழைத்து வரும் முயற்சியில் ராமதாஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


'கட்சியின் அடிப்படை சட்ட திட்டங்களின்படி, என்றைக்கிருந்தாலும், ராமதாஸ் பக்கம்தான் கட்சி செல்லும். விரைவில் பொதுக்குழுவை கூட்டி, கட்சி தன்னுடையதுதான் என, ராமதாஸ் நிரூபிப்பார். அதனால், இப்போதே ராமதாஸ் பக்கம் வந்து விடுங்கள்.


'இப்போதிருக்கும் சூழ்நிலையில், ராமதாஸ் பக்கம் யார் வந்தாலும், அவர்களுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு அளிக்க ராமதாஸ் தயாராக இருக்கிறார். அப்படி, அணி மாறி வந்தவர்கள் பலருக்கும் பொறுப்புகள் அறிவிக்கப்படுகின்றன' என்று ஆசை வார்த்தை சொல்லி, ராமதாஸுக்கு ஆதரவாக செயல்பட ஆள் பிடித்து வருகின்றனர்.



இதற்கிடையில், பொதுக்குழு என கூட்டினால், கட்சியின் பொதுச்செயலராக இருப்பவர் முக்கியம் என்பதால், பா.ம.க., பொதுச்செயலராக இருக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த வடிவேல் ராவணனை, எப்படியாவது தன் பக்கம் அழைத்து வாருங்கள் என, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டார், அன்புமணி.



வடிவேல் ராவணன், ரொம்பவும் கஷ்டத்தில் இருப்பவர். அதை வைத்து, அன்புமணி ஆதரவாளர்கள் அவரிடம் பேசினர். 'அன்புமணியும் அவருடைய மனைவி சவுமியாவும் உங்களை சந்திக்க விரும்புகின்றனர். ராமதாஸ், அந்த காலத்து அரசியல்வாதி. நிகழ்காலத்துக்கு ஏற்றார்போல செயல்படுபவர், அன்புமணிதான்.



'கட்சியின் எதிர்காலமும் அன்புமணியை நோக்கித்தான் உள்ளது. நீங்கள் ராமதாஸ் பக்கமே கூட இருங்கள்; ஆனால், ஒரு முறை அன்புமணியை மட்டும் பாருங்கள்' எனக்கூறி, வடிவேல் ராவணனை, அன்புமணி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு, அவரை வரவேற்ற அன்புமணியும் சவுமியாவும் வெகுநேரம், பா.ம.க., எதிர்காலம் குறித்து பேசியுள்ளனர்.


பின், வீட்டின் பூஜை அறை பக்கம், வடிவேல் ராவணனை வரவழைத்த அன்புமணியும் சவுமியாவும், அங்கு மாட்டப்பட்டிருந்த சாமி படங்களுக்கு தீப ஆராதனை காட்டி விட்டு, நாத்திகரான வடிவேல் ராவணனையும் வணங்க வைத்துள்ளனர்.

லெதர் பேக்



இதையடுத்து, 'அன்புமணி பக்கம்தான் இருப்பேன்,' என, சத்தியம் வாங்காத குறையாக உருக்கமாக பேசிய இருவரும், 'நீங்கள் கடைசி வரை எங்கள் பக்கம்தான் இருக்க வேண்டும்' எனச் சொல்லி, பெரிய லெதர் பேக் ஒன்றை கொடுத்துஉள்ளனர்.



'ஒவ்வொரு கட்சியிலும், பொதுச்செயலர் என்பவர் 'டொயோட்டா இன்னோவா' காரில் செல்கிறார். ஆனால், பா.ம.க.,வின் பொதுச்செயலரான நீங்கள் மட்டும் நடந்தும், டூ - வீலரிலும் செல்கிறீர்கள். அது எங்களுக்கு நீண்டநாள் மனக்குறையாக உள்ளது. அதனால், இந்த லெதர் பேக்கில் இருபது லட்ச ரூபாய் உள்ளது. உடனே, ஒரு காரை வாங்குங்கள்.



'இனி, நீங்கள் அந்த காரில்தான் அலுவலகம் வர வேண்டும். இனி பொருளாதார ரீதியில் உங்களுக்கு எந்தவொரு குறையும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி, வடிவேல் ராவணனை அனுப்பி வைத்துள்ளார், அன்புமணி.



உடனே, 16 லட்ச ரூபாய்க்கு, 2016 மாடல், பயன்படுத்திய 'இன்னோவா' காரை வாங்கிய வடிவேல் ராவணன், அதே காரில் குதுாகலத்துடன் தன்னுடைய சொந்த ஊரான தேனிக்கு சென்று, திரும்பி உள்ளார்.


இதுபோலவே, ராமதாஸ் பக்கம் இருக்கும் மற்ற கட்சி நிர்வாகிகளையும், அவர்களுக்கேற்ற துாண்டிலோடு, அன்புமணி ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.





- நமது நிருபர் -

Advertisement