ரூ.250 கோடி காங்., சொத்துகள் வடமாவட்டங்களில் அதிரடி மீட்பு

1

காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு, வட மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பாதுகாக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சிக்கு, காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களின் மதிப்பு, பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.

விசாரணை



சென்னையில் மட்டும் சத்தியமூர்த்தி பவன் கட்டடம், தேனாம்பேட்டை கட்டடம், காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுஉள்ளது.

இது தவிர, பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசுக்கு, சொந்தமான சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும், தனியார் வசத்திடமும் சிக்கி உள்ளன. நீதிமன்ற வழக்கு, ஆர்.டி.ஓ., விசாரணை என, பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ள சொத்துக்களை முறைப்படுத்தும் நடவடிக்கையை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை எடுத்து வருகிறார்.

சமீபத்தில், சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுத் தலைவர் தங்கபாலு தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மீட்பு குழு இணை செயலர் நிதின்கும்பல்கர், உள்ளிட்ட குழுவினர், வட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஆய்வு நடத்தியதன் வாயிலாக, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

சொத்துக்களை நிர்வகித்து, வாடகை வாங்கி வரும் நிர்வாகிகளை சந்தித்து, வரவு - செலவு கணக்குகளை, தமிழக காங்கிரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். சொத்துக்களின் ஆவணங்களையும் ஒப்படைக்க சொல்லி உள்ளோம்.

கம்பி வேலி



சில சொத்துக்களை, போலி ஆவணங்கள் வாயிலாக விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன், அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சொத்துக்களுக்கு சுற்றுச்சுவர், காலி நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




- நமது நிருபர் -

Advertisement