துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு

புதுச்சேரி : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் 3 நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். அவரை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்றனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு மதியம் 1:15 மணிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணக்குமார், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின், அங்கிருந்து கார் மூலம் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு இரவு அவர் ஓய்வெடுத்தார்.

அவர் இன்று 16ம் தேதி மாலை 3:45 மணிக்கு ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி செல்லுகின்றார். அங்கு அப்துல் கலாம் கலையரங்கில் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றார்.

தேசத்தை கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.

மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட தாயாரின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய தாயார் கேசரி தேவியின் பெயரில் ஒரு மரக்கன்றினை நட உள்ளார். மாலை 4:00 மணிக்கு துவங்கும் இந்த கலந்துரையாடல் 5:00 மணிக்கு முடிகிறது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

நாளை 17ம் தேதிகாலை 11:00 மணிக்கு காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக நேரு அரங்கில் நடக்கும்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து 12:00 மணிக்கு அங்கிருந்து விடைபெற்று புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். 12:15 மணி முதல் 12:25 மணி வரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1:15 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து டில்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement