கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்

கடலுார் : கடலுார் முதுநகர் அருகே டெம்போ டிராவலர் மீது கார் மோதி ஒருவர் இறந்தார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தாமஸ்,45; இவர் தனது மனைவியுடன் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்தார். நேற்று மாலை மீண்டும் சென்னைக்கு டி.என்.09 சி.கே.6597 பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் புறப்பட்டார். காரை தாமஸ் ஓட்டினார்.

இரவு 7:40மணிக்கு கடலுார் முதுநகர் அடுத்த அன்னவெளி புறவழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற டெம்போ டிராவலரை முந்தி செல்ல முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், டெம்போ டிராவலரில் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

அப்போது எதிரில் கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, கவிழ்ந்து கிடந்த இரு வாகனங்கள் மீது மோதியது. விபத்தில் தாமஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி மற்றும் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement