இரும்பு தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல்

படப்பை:சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைப்பது வண்டலுார் - வாலாஜாபாத் சாலை.

ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள 'சிப்காட்' தொழிற்பூங்காக்களில், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்து, நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை குறைக்க வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஆறுவழியாக விரிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் நெரிசல் குறைந்துள்ளது.

இந்நிலையில், படப்பை அருகே வஞ்சூவாஞ்சேரி, காரணிதாங்கல் ஆகிய பகுதிகளில் காவல் துறை சார்பில் சாலையின் குறுக்கே பேரிகாட்டு எனும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இவை, போக்குவரத்து இடையூறாக உள்ளதால் காலை, மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த தடுப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement