கோவில் நுழைவாயில் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சைவண்ண பெருமாள் கோவில் நுழைவாயில் சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளால் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலையில், பச்சைவண்ண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மஹா விஷ்ணு மரகத மேனியாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், பச்சை வண்ண பெருமாள் என, அழைக்கப்படுகிறார்.

இங்கு சனிக்கிழமை, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், மாதாந்திர ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமின்றி, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் பராமரிக்காததால், கோவில் நுழைவாயில் சுவரில் அரச செடிகள் வளர்ந்துள்ளன. செடிகளின் வேர்களால் நுழைவாயில் சுவரில் உள்ள சிற்பங்கள் சேதமாவதுடன், விரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, கோவில் நுழைவாயில் சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளை வேருடன் அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement