மருத்துவ அலுவலர் வீட்டில் திருடிய இருவர் கைது

காஞ்சிபுரம், தனியார் சித்த மருத்துவ அலுவலர் வீட்டில் திருடிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துபெருமாள், 47; தனியார் சித்த மருத்துவமனை நிர்வாக அலுவலர். கடந்த மே- 30ம் தேதி வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில், வைத்திருந்த 129 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், 21 லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிந்தன.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், முத்துபெருமாள் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, மூன்று தனி படை போலீசார் அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

நேற்று, செட்டிப்பேடு பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சிக்கினர். போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தனர்.

முறையான விசாரணைக்கு பின், முத்துபெருமாள் வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, அயநல்லுார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 31. நல்லுார் மாவட்டம், கரூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 23, ஆகிய இருவரையும் கைது செய்து, திருடு போன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement