மகளிர் உரிமை தொகை ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ''அடுத்த மாதம் 15ம் தேதி முதல், மகளிர் உரிமைத்தொகை பெற, விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர்கள் தினம், தமிழ்நாடு வீட்டு வேலை தொழி-லாளர்கள் அறக்கட்டளை சார்பில், 'கண்ணியமும், நியாயமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி' என்ற தலைப்பில், சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

தி.நகர், பி.டி.தியாகராஜர் கலையரங்கத்தில் நடந்த விழாவில், அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 500க்கும் மேல் மதிப்பெண் பெற்ற வீட்டு வேலை தொழிலாளர்களின் குழந்தைகள் 25 பேருக்கு, தலா 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

பெற்றோர் பெண்களை படிக்க வைப்பது மட்டுமின்றி, அவர்களை கண்காணிப்பதும் அவசியம். குழந்தைகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

அது, பாதுகாப்பு என்பதோடு, அவர்கள் கல்வியில் உயர்வதற்கான வழியாகும். மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து விடுபட்டவர்கள், கடந்த மாதம் விண்ணப்பிக்கலாம் என பொய்யான தகவல் பரவியது. முதல்வர் அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். அடுத்த மாதம் 15ம் தேதி முதல், விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement