சென்னை டிரையத்லான் நீச்சல் போட்டி இந்திய வீரர் - வீராங்கனையர் சாதனை

சென்னை: சென்னையில் நடந்த டிரையத்லான் நீச்சல் போட்டியில், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்திய வீரர் - வீராங்கனையர் முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர்.


'ட்ரை டு சாம்ப்' நீச்சல் அமைப்பு, தமிழ்நாடு நீச்சல் சங்கம் போன்றவற்றின் சார்பில், 'அக்வாபெஸ்ட் 25 சென்னை' எனப்படும், டிரையத்லான் கடல்சார் போட்டியின் நான்காவது பதிப்பு, சென்னை மற்றும் கோவளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.


நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகள், காலை 6:00 மணிக்கு துவங்கி அந்த நாள் முழுதும் நடந்தது. முக்கிய போட்டியாக டிரையத்லான் லாங் டிஸ்டன்ஸ், ஒலிம்பிக் டிஸ்டன்ஸ் நீச்சல் மற்றும் மாரத்தான் நடந்தது.



ஆடவருக்கான ஒலிம்பிக் டிஸ்டன்ஸ் நீச்சல் போட்டியில், இந்தியாவை சேர்ந்த வாமன், ஜினோ, முடிட் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.


பெண்கள் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த ஆர்த்தி நயினார், அனுருபா பவுமிக் ஆகியோர் முதல்இரண்டு இடங்களை பிடித்தனர். ஜப்பானின் ஹருகா சைட்டோ மூன்றாவது இடம் பெற்றார்.


தொடர்ந்து நடந்த 10 கி.மீ., நீச்சல் போட்டி ஆண்கள் பிரிவில், பிரதம் பதாசியா, ரோன் சில்வர், பெரியநாயகசுவாமி; பெண்கள் பிரிவில் சுனிதா தோத்தே, தனுஜா, அமிர்தா ரவிகுமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

டிரையத்லான் ஸ்பிரின்ட் ஆண்கள் யு-18 பிரிவில் சாய் லோஹிதாக் ஷ், லக் ஷனா நரேஷ், நிக்கோலஸ் கார்ல் சான்; பெண்கள் பிரிவில் ஜமீலா மோருத்வாலா ஆகியோர் வெற்றி பெற்றனர்.



டிரையத்லான் லாங் டிஸ்டன்ஸ் ஆண்கள் பிரிவில், ராம குழந்தைவேலு முதலிடம் பிடித்தார். அவர் 7 மணி நேரம் 41 நிமிடம் 30 விநாடிகளில் பந்தய துாரத்தை கடந்தார். இரண்டாவதாக வந்த ராஜேஸ் கிருஷ்ணன், 8 மணி நேரம் 32 நிமிடம் 51 விநாடிகளில் கடந்தார்.


'நல்ல அனுபவம்'

போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீராங்கனை ஹருகா சைட்டோ கூறுகையில், “இந்த போட்டியை நடத்திய, 'ட்ரை டு சாம்ப்' நீச்சல் அமைப்புக்கு நன்றி. சென்னையில் இதுபோன்ற போட்டிகள் பெரிதாக நடப்பதில்லை. எனக்கு இந்த போட்டி நல்ல அனுபவமாக இருந்தது. நான் வெற்றி பெற்றதை சிறப்பாகக் கருதுகிறேன்,” என்றார்.

Advertisement