சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

பாகூர், : கன்னியக்கோவிலில் சாலையோர பள்ளத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

புதுச்சேரி --- கடலூர் சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலை கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டு விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலை குறுகலாக மாறியதால், வாகனங்கள் முந்தி செல்வது பெரும் சவாலான விஷயமாக உள்ளது. அப்படியே முந்தி செல்ல வேண்டும் என்றால், தார் சாலையை விட்டு மண் சாலையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், கன்னியக்கோவில் கிழக்கு பக்க சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம், மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக, பொதுப் பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement