பிரதமர் குறித்து அவதுாறு போலீசில் பா.ஜ., புகார்

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சைபர் போலீசில், பா.ஜ.,வினர் புகார் அளித்தனர்.

ஹடிமணி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, யஷ்வந்த்பூர் சைபர் போலீசில், மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார் தலைமையில் பா.ஜ.,வினர், புகார் அளித்தனர்.

பின், ரவிகுமார் அளித்த பேட்டி:

உலகம் போற்றும் பிரதமர் நரேந்திர மோடியை, சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சித்துள்ள ஹடிமணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் செயலால் கோடிக்கணக்கான மக்கள் வேதனை அடைந்து உள்ளனர். இது தொடர்பாக யஷ்வந்த்பூர் சைபர் போலீசில் புகார் அளித்து உள்ளோம். வழக்கு பதிவு செய்தாக போலீசாரும் தெரிவித்து உள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானதற்கு, அரசே நேரடியாக பொறுப்பாகும். இதற்கு பொறுப்பேற்று, முதல்வரும், துணை முதல்வரும் பதவி விலக வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளை, மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement