துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு

துமகூரு : துமகூரை, 'பெங்களூரு வடக்கு' மாவட்டமாக்கும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் கோரிக்கைக்கு, சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர், பல்வேறு சங்க அமைப்பினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ராம்நகரின் பெயரை 'பெங்களூரு தெற்கு' என, மாநில அரசு பெயர் மாற்றம் செய்தது. இதைத் தொடர்ந்து, வேறு சில மாவட்டங்களின் பெயரை மாற்றவும் முயற்சி நடக்கிறது.

துமகூரின் பெயரை, 'பெங்களூரு வடக்கு' என, பெயர் மாற்றும்படி முதல்வர் சித்தராமையாவிடம், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு துமகூரின் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின், மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதுகுறித்து, துமகூரில் நேற்று அளித்த பேட்டி:

வளர்ச்சியை மனதில் கொண்டு, துணை முதல்வர் சிவகுமார், ராம்நகர் மாவட்டத்தின் பெயரை, பெங்களூரு தெற்கு என, மாற்றியுள்ளார். ஆனால் துமகூரின் பெயரை, பெங்களூரு வடக்கு என, மாற்றும்படி உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், என்ன காரணத்தால் வேண்டுகோள் விடுத்தார் என்பது தெரியவில்லை.

துமகூருக்கு தனி பாரம்பரியம், கவுரவம், வரலாறு உள்ளது. இப்போது திடீரென பெயரை எப்படி மாற்ற முடியும்? துமகூரு பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதே பெயரை தக்கவைத்துக் கொள்வது அவசியம். தற்போதைக்கு துமகூரை பெங்களூரு வடக்கு மாவட்டமாக்கும் விஷயம், ஆலோசனை அளவில் உள்ளது.

வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பெயரை மாற்றுவதால் என்ன பயன், மாற்றாவிட்டால் என்ன பயன் என்ற சாதகம், பாதகங்களை ஆராய்ந்து பார்த்து, அதன்பின் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement