அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்

தாவணகெரே : மனு அளிக்க அனுமதிக்காத போலீசாரால் கோபமடைந்த விவசாயிகள், முதல்வரின் காரை நிறுத்தி கோபத்தை வெளிப்படுத்தினர்.

தாவணகெரே மாவட்டம், சர்க்யூட் ஹவுசுக்கு நேற்று வந்திருந்த முதல்வர் சித்தராமையா, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின் அங்கிருந்த பொது மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது, அங்கு வந்த நிலம், நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாய குழுவினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேவேளையில், முதல்வர் சித்தராமையா சர்க்யூட் ஹவுசில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது தடுத்து நிறுத்தப்பட்ட விவசாய குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார், முதல்வரின் காரின் முன் படுத்துக் கொண்டார்.

அவரை போலீசார் எழுப்ப முயற்சித்தனர். அப்போது உடனிருந்த குழுவினர், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்களை தன்னிடம் அழைத்து வரும்படி முதல்வர் உத்தரவிட்டார். தன் அருகில் வந்தவர்களிடம், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், அவர்களை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

பின், முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து விவசாய குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார், ''மாவட்டத்தில் உள்ள 538 ஏரிகளில் 100 ஏரிகள் துார்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏரிகள் துார்வாரப்பட்டால், விவசாயிகளுக்கு பயனளிக்கும். நீர் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் ஏரிகளை பாதுகாக்க வேண்டும். இதற்காக நிதி ஒதுக்குமாறு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

''முதல்வர் முன்னிலையில் விவசாயிகளை போலீசார் அவமதித்துள்ளனர். விவசாயிகளை இழுத்துச் சென்று தாக்க முயன்ற போலீசார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement