எல்லை வழியாக இந்தியர்களை வெளியேற்ற ஈரான் அனுமதி

2


புதுடில்லி : இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நடக்கும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும், 10,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை, எல்லை வழியாக பாதுகாப்பாக வெளியேற்ற, அந்நாடு உறுதியளித்துள்ளது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடக்கிறது.

பதற்றம்



இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

ஈரானில் உள்ள பல்கலைகளில், 10,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். போர் பதற்றம் நீடிப்பதால், இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.


இது குறித்து ஈரானில் உள்ள நம் துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அவர்களை வெளியேற்ற ஈரான் அரசு பாதுகாப்பான பாதையை வழங்க வேண்டும்' என, கோரியிருந்தது.



இதற்கு பதிலளித்த ஈரான் அரசு, 'போர் பதற்றத்தால் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்ல, எங்களது எல்லையில் உள்ள நிலப் பகுதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்' என, தெரிவித்தது. இதற்கிடையே, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள், கோம் நகருக்கு நேற்று பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாணவர் விடுதி



டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கான விடுதியில், நேற்றிரவு நடந்த தாக்குதலில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த இரு மாணவர்கள் காயமடைந்தனர்.



நிலைமை மோசமடைவதற்கு முன், ஈரானில் இருந்து தங்களை வெளியேற்றும்படி, இந்திய மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement