புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமே... நிரந்தர தீர்வு; துணை ஜனாதிபதியிடம் முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, துணை ஜனாதிபதியிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்துள்ளார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிட மாநில அந்தஸ்து அவசியம் என முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் இதுதொடர்பாக தொடர்ந்து மனு அளித்து வருகிறார். மேலும் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரிலும், மாநில அந்தஸ்தை வலியுறுத்தி 15ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்த உள்ளார். இதற்காக அவர் நடத்திய ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தை, முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்நிலையில், மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை, நேற்று சந்தித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மனு அளித்தார்.

மனு விபரம்



புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், கட்சி பேதமின்றி, மாநில அந்தஸ்தை வழங்க வேண்டிய மத்திய அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தியுள்ளன. புதுச்சேரி சட்டசபையிலும் அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் மற்றும் மக்களின் தீவிர விருப்பமான மாநில அந்தஸ்தை புதுச்சேரிக்கு வழங்கப்பட வேண்டும்.

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அரசியலமைப்பின்படி அல்ல, பல தசாப்தங்களுக்கு முந்தைய நாடாளுமன்ற சட்டமான 1963ம் ஆண்டு யூனியன் பிரதேச அரசு சட்டத்தின்படி இன்னும் நடைமுறையில் உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட அரசு என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். அமைச்சரவை மற்றும் சட்டசபையுடன் ஜனநாயக ரீதியாக அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அமைச்சரவை மட்டத்தில் அதிகாரங்கள் இல்லாததால் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்த முடியவில்லை.

சட்டசபை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி ஆணையத்தில் சேர்க்கப்படவில்லை. இது ஒரு யூனியன் பிரதேசம் எனக்கூறி அதன் வளர்ச்சிக்கு முறையற்ற நிதிப் பகிர்வை ஏற்படுத்துகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், தற்போதுள்ள சூத்திரத்தின்படி சுமார் ரூ.1,500 கோடி முதல் 2,000 கோடி வரை கூடுதல் நிதிப் பகிர்வை எதிர்பார்க்கலாம். இது வேகமாக வளர்ந்து வரும் இடத்தை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மேம்படுத்த பல்வேறு உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். யூனியன் பிரதேசமாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், வேலை வாய்ப்ப்பு திறனை ஏற்படுத்தும் வகையில், தொழில் துறை மேம்பாட்டிற்கான முதலீட்டார்களை ஈர்க்க முடியவில்லை.

எனவே, புதுச்சேரியை வாழ்க்கை தரத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், சுற்றுலா மற்றும் தொழில்துறை மேம்பாட்டை மேம்படுத்தவும், மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து உயர் மட்டங்களில் விவாதிக்குமாறு தங்களிடம் மனதாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement