மத்திய அரசுக்கு அபிஷேக் பானர்ஜி 5 கேள்வி

கொல்கட்டா : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, திரிணமுல் காங்., பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி மத்திய அரசுக்கு ஐந்து கேள்விகளை எழுப்பி உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, மே 7ல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் அழித்தது.
இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்கள் மோதல் நீடித்த நிலையில், பாக்., கெஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று, திரிணமுல் காங்., பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பஹல்காம் தாக்குதல் நடந்து, 55 நாட்களுக்கும் மேலாகி விட்டது.
'ஒரு ஜனநாயக நாட்டில், பிரதான ஊடகங்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்லது நீதித்துறை என யாரும், மத்திய அரசிடம் முக்கிய கேள்விகளை எழுப்பாதது கவலை அளிக்கிறது. பொறுப்புள்ள குடிமகனாகவும், எம்.பி.,யாகவும் முக்கியமான ஐந்து கேள்விகளை முன்வைக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
1 ஆயுதமேந்திய நான்கு பயங்கரவாதிகள் எப்படி எல்லைக்குள் ஊடுருவினர்? மக்கள் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தினர்?
2 இது உளவுத் துறை தோல்வி என்றால், தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்கு பின், உளவுத் துறை தலைவருக்கு ஏன் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?
எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின், 'மொபைல் போன்'களை, 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக கண்காணித்த மத்திய அரசால், பயங்கரவாத நெட்வொர்க் மற்றும் சந்தேக நபர்களை கண்காணிக்க அதே மென்பொருளை பயன்படுத்தாதது ஏன்?
3 இந்த மிருகத்தனமான தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகள் எங்கே? அவர்கள் இறந்து விட்டனரா அல்லது உயிருடன் உள்ளனரா? அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அரசு ஏன் அறிக்கை வெளியிடவில்லை?
4 பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய அரசு எப்போது மீட்கும்? வர்த்தகத்தை காட்டி இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். இதில் அரசு ஏன் மவுனம் காக்கிறது?
5 பஹல்காம் தாக்குதலுக்கு பின், எத்தனை நாடுகள் இந்தியாவிற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கின? நாம் உண்மையிலேயே விஸ்வ குருவாகவும், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும் இருந்தால், பஹல்காம் தாக்குதலுக்கு பின், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கியது ஏன்?
இந்த கேள்விகளின் பதில்களுக்காக நாடு காத்திருப்பதாக அபிஷேக் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
