வைகை அணையில் பெரிய மதகுகள் வழியாக நீர் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஆண்டிபட்டி; வைகை அணையில் இருந்து பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை உள்ளது. 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்த நீர்த்தேக்கம், வலது இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

நேற்று முன்தினம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து பெரிய மதகுகள் வழியாக வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு பின் அணையில் நீர் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.

இந்நிலையில் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டு வினாடிக்கு 700 கன அடி வீதம், பவர் ஹவுஸ் மற்றும் சிறிய மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

பெரிய மதகுகள் வழியாக வரும் நீரை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று ஆர்வத்துடன் வந்து ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வைகை அணை நீர்மட்டம் 61.52 அடியாக இருந்தது அணை உயரம் 71 அடி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1192 கன அடி.

Advertisement