அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்தது யார்? ஸ்வீடன் ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியீடு

புதுடில்லி: அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்த நாடு எது என்ற விபரங்களை, ஸ்டாக்ஹோமை சேர்ந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நேரத்தில், இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானை விட இந்தியா கூடுதல் அணு ஆயுத பலத்தை பெற்றுள்ளதாகவும், ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதாகவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆயுத அறிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் -- ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து, உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அணு ஆயுத மோதல் தொடர்பான அச்சுறுத்தல் பேசுபொருளாகி உள்ளது.
அணு ஆயுத பலம் கொண்டுள்ள நாடு வலிமையான நாடாக கருதப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோம் நகரத்தில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
'சிப்ரி' எனப்படும், இந்த நிறுவனம், 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளைக் கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் புத்தகம் உலகின் அணு ஆயுத சமநிலையில் நம்பகமான மதிப்பீடாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு, அணு ஆயுத பலத்தில் யார் சிறந்து விளங்குவது என்பது தொடர்பான புத்தகம், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதன் விபரம்:
ரஷ்யா
உலகின் முன்னணி அணுசக்தி நாடாக ரஷ்யா உள்ளது. அந்நாட்டிடம், 5,880 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் பல ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, 2,100 ஏவுகணைகள் உயர் செயல்பாட்டு எச்சரிக்கையில் வைக்கப்பட்டு, ஏவ தயாராகவும் உள்ளன.
அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கைகள் இருந்தபோதிலும், ரஷ்யா தன் அணு ஆயுதக் களஞ்சியத்தை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. இது அமைப்புகளை மேம்படுத்துவதையும் அதன் தாக்கும் திறனை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா
மொத்தம், 5,244 அணு ஆயுதங்களை அமெரிக்கா வைத்துள்ளது. அவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நில அடிப்படையிலான ஏவுகணைகளில் பயன்படுத்த முடியும்.
ரஷ்யாவைப் போலவே, இவற்றில் கணிசமான எண்ணிக்கையானது சில நிமிடங்களில் ஏவப்படும் திறன் கொண்டது.
சீனா
உலகில் வேகமாக வளர்ந்து வரும் அணுசக்தி அமைப்பாக, சீனா உள்ளது.
இந்தாண்டு துவக்கத்திலேயே சீனாவின் அணு ஆயுத களஞ்சியம், 600ஐ தாண்டியது. மூன்று பெரிய பாலைவனப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணைகளை சீனா உருவாக்கியுள்ளது.
அமைதி காலத்தில், சீனா பல ஏவுகணைகளை போர்முனையில் தயார்நிலையில் வைத்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு போட்டியாக, வரும் 2035ம் ஆண்டுக்குள், 1,500 போர்முனைகளில் ஏவுகணைகளை சீனா தயார்நிலையில் வைக்கும் என நம்பப்படுகிறது.
பிரான்ஸ்
பிரான்ஸ், 290 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது. ஆனால், திரைக்கு பின்னால் அது அடுத்த தலைமுறை அமைப்புகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. அதன் அணுசக்தி பாதுகாப்பை மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் நீட்டிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
பிரிட்டன்
பிரிட்டனில் 250 அணு ஆயுத தளவாடங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அணு ஆயுதங்களை ஏந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று எப்போதும், பிரிட்டன் கடல்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. 2023ல் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த மதிப்பாய்வு புதுப்பிப்பு, முறையான பாதுகாப்பு கொள்கை புதுப்பிப்பு ஆகியவை, போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், பிரிட்டனின் அணு ஆயுத பலம் மேலும் அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தியா
மொத்தம் 172 அணு ஆயுதங்களை இந்தியா வைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட இது அதிகம். போர்க்கப்பல் எண்ணிக்கையில் போதிய வளர்ச்சி இல்லை என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் முறையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அணு ஆயுதங்களை சேமித்து சீல் வைக்கப்பட்ட கொள்கலன்களில், ஏவுகணைகளில் முன்கூட்டியே பொருத்தக் கூடிய அமைப்பில் இந்திய ராணுவம் பணியாற்றி வருகிறது. ஒரு ஏவுகணை, பல அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு சென்று தாக்கும் திறன் வாய்ந்த எம்.ஐ.ஆர்.வி., எனப்படும் ஏவுகணைகளை பயன்பாட்டில் வைத்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. வெளிப்படைத்தன்மை அல்லது வலுவான மேற்பார்வை வழிமுறைகள் இல்லாவிட்டாலும், தனது ஆயுதக் களஞ்சியத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.
அணு ஆயுதங்கள் வாயிலாக குறுகிய துாரத்திலேயே தாக்கும் எண்ணம் உள்ள பாகிஸ்தானின் அணுசக்தி கோட்பாடு தெளிவற்ற முறையில் உள்ளது.
அந்நாட்டின் அணு ஆயுத பயன்பாடு ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு மேலும் வளரும்.
இஸ்ரேல்
இஸ்ரேலின் அணு ஆயுதக் கிடங்கு 80 முதல் 90 போர்முனைகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அந்த நாடு அதன் நீண்டகால அணு ஒளிபுகா கொள்கையை தொடர்ந்து பராமரித்து வருகிறது.- அது அணு ஆயுதங்களை வைத்திருப்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
அதேசமயம், தன் அணுசக்தி திறன்களை இஸ்ரேல் நாளுக்குநாள் நவீனமயமாக்கி வருகிறது. இஸ்ரேல்- - ஈரான் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்த முன்னேற்றங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
வடகொரியா
இந்த ஆண்டின் துவக்கத்தில் 50 அணு ஆயுதங்களை சேகரித்துள்ளதாகவும், கூடுதலாக 40 வரை உருவாக்க போதுமான பிளவு பொருள், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்துள்ளதாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு