பா.ம.க.,வில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை: ஜி.கே.மணி

திண்டிவனம் : ''ராமதாசும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால், கட்சியில் நிலவும் பிரச்னை நொடியில் தீர்ந்து விடும்,'' என பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே. மணி கூறினார்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பொதுக்குழுவைக் கூட்டும் நோக்கத்தில், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்து, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார்.


அதன்படி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம், ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்ட சேலம் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது.


கூட்டத்தில், 'உயிர்மூச்சு உள்ளவரை நான்தான் கட்சியின் தலைவராக இருப்பேன்' என ராமதாஸ் கூறினார்.



அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்' என்று ராமதாசிற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பேசினார்.


இந்நிலையில், நேற்று காலை தெற்கு, மேற்கு மாவட்டங்களான, கோயம்புத்துார், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி என 16 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நடந்தது.


நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச்செயலர் முரளிசங்கர், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டத்துக்குப் பின், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி:
ராமதாசும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால், நொடியில் பிரச்னை தீர்ந்து விடும். அதுவே, கட்சி நிர்வாகிகளின் மன உளைச்சலுக்கும் தீர்வாகவும் இருக்கும்.



பா.ம.க.,வில் சுமூக தீர்வு ஏற்படுவது இருவரின் கைகளில் உள்ளது. இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. நாட்டிற்கே அறிவுரை, அரசியல் ஆலோசனை வழங்கக்கூடிய இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

Advertisement