காலில் கொப்புளத்துடன் அரசு டாக்டர்கள் யாத்திரை

விக்கிரவாண்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அரசு டாக்டர்கள், காலில் கொப்புளங்களுடன் தங்களின் நடைபயணத்தை தொடர்கின்றனர்.


அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு டாக்டர்கள் குழுவினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11ல் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயத்திரை துவக்கினர்.


மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும். கொரோனா பேரிடரில் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு அரசாணை எண் 354ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று காலை முண்டியம்பாக்கம் வந்த பாதயாத்திரை குழுவினரை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் புகழேந்தி, ராஜி, அறிவழகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மருத்துவமனை வளாகத்தில், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சட்ட போராட்ட குழுவினர் கோஷங்களை எழுப்பினர்.


டாக்டர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:

அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை, இன்றைய முதல்வர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, எங்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும் போது, டாக்டர்களுக்கு எதுவும் செய்யாமல், முதல்வர் பாராமுகமாக இருக்கிறார்.


முதல்வரின் கவனத்தை ஈர்க்கவே பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். யாத்திரையில் ஈடுபட்டுள்ள எனக்கும், வேறு சில டாக்டர்களுக்கும் காலில் கொப்புளம் ஏற்பட்டுள்ளது. இனியாவது அரசு மனம் இறங்குமா என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement