விதை நெல் விற்பனை 'ஜரூர்': கண்காணிப்பு அவசியம்

கம்பம் : முதல் போக சாகுபடிக்கான விதைநெல் கொள்முதலில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விதை சான்றளிப்பு துறையினர் கண்காணிப்பு செய்வது அவசியமாகும்.

கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கென முல்லைப்பெரியாறு அணையிலிருந்து ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

வாய்க்காலை பராமரிக்கின்றோம் என கூறி நீர்வளத்துறையினர் உத்த முத்து வாய்க்காலில் தண்ணீர் விடவில்லை.

இதில் உள்ள 45 மடைகளுக்கு 18 மடைகள் வரை தான் தண்ணீர் திறந்து 15 நாட்கள் கழித்து நேற்று தண்ணீர் தந்துள்ளனர்.

இந்நிலையில் நாற்றாங்கால் வளர்க்க விவசாயிகள் விதை நெல் கொள்முதலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை மற்றும் தனியார் கடைகளிலும் விதைநெல் கொள்முதல் செய்கின்றனர். பெரும்பாலும் ஆர். என். ஆர். என்ற ரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் கொள்முதல் செய்யும் இந்த வேளையில், விதை சான்றளிப்பு துறை கண்காணிப்பு செய்ய வேண்டும். முளைப்பு திறன், சான்றளிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பெயரளவிற்கு என்றில்லாமல் கூடுதல் கவனத்துடன் விதை சான்றளிப்பு துறை களம் இறங்க வேண்டும். நடவு செய்து பின் பயிர் வளர்ச்சி இல்லை என்று விவசாயிகள் கூறாமல் இருக்க நடவடிக்கை அவசியமாகும்.

Advertisement