கேரள அரசு பஸ்களில் கூரியர் சேவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் நறுமணப் பொருள் வியாபாரிகள் கோரிக்கை

கம்பம் : கூரியர், மற்றும் பார்சல் சேவையை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் நடத்தி வருவதை போன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் கூரியர் மற்றும் பார்சல் சேவையை கடந்தாண்டு துவக்கியது. முதற்கட்டமாக பெங்களூரு, மைசூரு, கோவை, தென்காசி, நாகர்கோயில் மற்றும் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கேரளாவில் உள்ள 55 டெப்போக்களில் இச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள டெப்போக்களில் 24 மணி நேரமும், சற்று துாரத்தில் உள்ள டெப்போக்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது. புக்கிங் செய்த 16 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.

பொருளை அல்லது தபாலை பெற்றுக் கொள்பவர்கள் அருகில் உள்ள டெப்போவிற்கு சென்று தனது அடையாள சான்றை காண்பித்து தபால், பார்சலை பெற்றுக் கொள்ளலாம்.

புக்கிங் செய்து டெலிவரி ஆகும்வரை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.. அனுப்பிய பொருளை 3 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் அரசே நடத்துவதால் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

தனியார் நிறுவனங்களை விட கட்டணம் குறைவாக இருப்பதால் தற்போது அரசு போக்குவரத்துக் கழக கூரியர் சேவைக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் நடத்த நறுமணப் பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement