பழனி, சமயபுரத்தில் இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி

6

சென்னை : 'பழனி, சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:



பக்தர்கள் அதிகமாக வரும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகிய கோவில்களில், தினமும் பிற்பகல் 3:00 முதல் 4:00 மணி வரை இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்பட்டு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு மணி நேரத்தில், 500 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத வழிபாட்டு சட்டப்படி, சுதந்திரத்திற்கு முன் கோவில்களில் என்ன வழிபாடு முறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். அவற்றை மாற்றம் செய்ய, எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை.



கோவில் பழக்கவழக்கங்களை மாற்றம் செய்யக்கூடாது என, கோவில் நுழைவுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வழிபாடு பூஜை தரிசனம் செய்யும் நேரங்களை மாற்றி அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.


ஆனால், தமிழக அரசும், அதிகாரிகளும், கோவில்களை வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனமாக கருதுகின்றனர். அதிக கட்டணம் பெற்று, இடைநிறுத்த தரிசன வசதியை ஏற்படுத்துவது, பக்தியோடு தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், ஆன்மிக தீண்டாமையை உருவாக்கும்.


எனவே, இடைநிறுத்த தரிசனத்தை கைவிட வேண்டும். அனைத்து கோவில்களிலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement