குழாய் வழியாக கிருஷ்ணா நீர் கைவிட்டதற்கு பன்னீர் கண்டனம்

சென்னை : குழாய் வழியாக கிருஷ்ணா நீரை பெறும் திட்டத்தை கைவிட்ட தி.மு.க., அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், கிருஷ்ணா நீர் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திராவில் 132 கி.மீ., தமிழகத்தில் 22 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வழியாக, தமிழகத்திற்கு 12 டி.எம்.சி., நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், கிருஷ்ணா கால்வாய் நீரை எடுத்து, ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனால் தமிழகத்திற்குரிய நீர் கிடைப்பதில்லை.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, ராட்சத குழாய் வழியாக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டுவர, தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதியை வழங்க, தமிழக நிதித்துறை மறுத்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசின் கடன் சுமை அதிகரிக்கும் எனக்கூறி, பன்னாட்டு வங்கிகளின் கடனுதவியால், இத்திட்டத்தை செயல்படுத்தவும், தமிழக அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நிதி நிலை சீரடைந்தால், இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.

சென்னை மாநகரின் மக்கள் தொகையும், குடிநீர்த் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, குழாய் வழியாக கிருஷ்ணா நீரினை பெறும் திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement