தொண்டியில் பலத்த காற்று; மீன் பிடிப்பதற்கு தடை

தொண்டி; தொண்டி, தேவிபட்டினத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், தொண்டி வரை 77 விசைப்படகுள், 3200 நாட்டுப்படகுகள் உள்ளன. மீன்கள் இனபெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடவும் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தபட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைகாலம் அறிவிக்கப்பட்டது. ஜூன் 14 இரவு வரை தடைகாலம் அமலில் இருந்த நிலையில் ஜூன் 15 ல் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும். மறுநாள் கடலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டோக்கன் வழங்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இது குறித்து மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் கூறியதாவது:

மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement