'நீட்' தேர்வில் தோற்றவர்களுக்கு ஆலோசனை தர மையம் திறப்பு

சென்னை: 'நீட்' தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் மையம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது.

மையத்தை திறந்து வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

தமிழகத்தில், நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 35,715 மாணவர்களில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள, 59,534 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க, முதல் கட்டமாக, 80 மனநல ஆலோசகர்களுடன், ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தனிமையில் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.



தேர்வில் தோல்வி அடைந்த பதற்றத்தால் ஏற்படும் துாக்கமின்மை, பசியின்மை, அழுகை, கோபம், பயம், தற்கொலை எண்ணம் உள்ளிட்டவற்றில் இருந்து, அவர்களை மீட்க ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.


தமிழகத்தில், 75 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 11,850 இடங்கள் தான் உள்ளன. நீட் தேர்வில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றாலும், அனைவருக்கும் இடம் கிடைக்காது. எம்.பி.பி.எஸ்., படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது.


அதேபோல, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளில் சேரலாம். மேலும், நீட் தேர்வு இல்லாமலேயே, கால்நடை மருத்துவம், யோகா உள்ளிட்ட படிப்புகளிலும் சேரலாம். இது குறித்த விழிப்புணர்வும் ஆலோசனை மையம் வாயிலாக ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement