காந்தாரா படக்குழுவுக்கு நோட்டீஸ் 3 நாட்களில் பதில் அளிக்க 'கெடு'

ஷிவமொக்கா : கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய காந்தாரா திரைப்படம் 2022ல் வெளியாகி தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தை நடித்து, இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இதுவரை மூன்று நடிகர்கள் உயிரிழந்தனர்.

எனினும் ஷிவமொக்கா, ஹொசநகரின் மாணி அணை பகுதியில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, அணையில் படகில் சென்று படப்பிடிப்பு நடந்தது. அப்போது, காற்றின் வேகம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. படகில் இருந்த ரிஷப் ஷெட்டி உட்பட பத்து நடிகர்களும் நீரில் விழுந்தனர்.

ஆழம் குறைவான பகுதி என்பதாலும், அனைவருக்கும் நீச்சல் தெரிந்ததாலும் உயிர் தப்பினர். இதையறிந்த ஷிவமொக்கா கலெக்டர் குருதத் ஹெக்டே, தாசில்தார் ரஷ்மி மூலமாக படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதுகுறித்து நேற்று கலெக்டர் அளித்த பேட்டி:

படப்பிடிப்புக்காக பல துறைகளிடமிருந்து பெற்ற அனுமதி குறித்து தாலுகா, மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, விபத்து நடந்த அன்று அரங்கேறிய சம்பவங்கள் குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே, வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். படப்பிடிப்புக்காக அனுமதி பெற்ற ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் படப்பிடிப்புக்கான அனுமதி ரத்து செய்வது குறித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement