விழா துளிகள்...

துணை ஜனாதிபதி உற்சாகம்



ஜிப்மர் மருத்துவமனைக்கு மாலை 4.05 மணிக்கு வந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விழா முடிந்த 5.13வரை உற்சாகமாக காணப்பட்டார். கொரோனா காலத்தில் மருத்துவர்கள் ஆற்றிய சேவையை பெரிதும் பாராட்டினார்.

உயரம் கம்மி



விழா மேடை உயரமாக இருந்ததால் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச ஆரம்பித்தபோது அசவுரியமாக உணர்ந்தார். உடனடியாக ஸ்டாண்ட் வேண்டும் என கேட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஸ்டாண்ட் கொண்டு வந்து வைத்தனர். தொடர்ந்து பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உங்களுடைய மனது, உடல் என்ன சொல்லுகிறதோ அதன்படி செயல்படுங்கள் என்று டாக்டர்கள் எனக்கு அட்வைஸ் செய்துள்ளனர். இப்போது உயரமாக நின்று பேச வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே எனக்கு இப்போது ஸ்டாண்ட் தேவை என சொல்ல அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

கவர்னர், முதல்வருக்கு பாராட்டு



துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக உள்ள கைலாஷ்நாதன் தொலைநோக்கு பார்வை கொண்டவர். புதுச்சேரி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த ஆர்வமாக உள்ளார். அதேபோல் மாநில முதல்வர் ரங்கசாமியும். புதுச்சேரி மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என முயற்சி எடுத்து வருகின்றார் என்று பாராட்டினார்.

இரண்டு மரக்கன்று நட்ட துணை ஜனாதிபதி



துணை ஜனாதிபதி வருகையாட்டி ஜிப்மர் வளாகத்தில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றபோது, அவரது தாயார் கேசரி தேவி பெயரில் ஜிப்மரில் மரக்கன்று நடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை ஜனாதிபதி தனது பெற்றோர் பெயரில் இரு மரக்கன்றுகளை நட உள்ளேன் என திடீரென அறிவித்தார்.

அதன்படி தாய் மறைந்த கேசரி தேவி,தந்தை மறைந்த கோகுல் சந்த் பெயரில் இரு மரக்கன்றுகளை நட்டார். தாய் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தாய், தந்தை என பெற்றோர் பெயர்களில் மரக்கன்று நடும் திட்டம் துவங்குவதாக விழாவிலும் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மருத்துவ மாணவர்கள் ஏமாற்றம்



துணை ஜனாதிபதி மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் கேள்விகள் தயார் செய்து வந்திருந்தனர். ஆனால் விழாவில் துணை ஜனாதிபதி மட்டுமே பேசினார், மாணவருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடக்கவில்லை.

பார்லிமெண்ட்டிற்கு வாங்க



துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது ஜிப்மரில் உள்ள மருத்துவ மாணவர்களை பார்லிமெண்ட்டிற்கு கெஸ்ட்டாக வர வேண்டும் என அழைக்கின்றேன். பார்லிமெண்ட்டிற்கு வந்து சுற்றிப் பாருங்கள். அரசியலைப்பினை தெரிந்து கொள்ளுங்கள் என்றதும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் ஒரே அமைதி. இதனை கவனித்த துணை ஜனாதிபதி, என்ன அமைதியாக இருக்கின்றீர்கள்.பார்லிமெண்டிற்கு எப்படி வருவது என்று கவலைப்பட வேண்டாம். புதுச்சேரியில் இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் உங்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவார்கள் என்றும் மருத்துவ மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

Advertisement