பெங்களூரில் இளம்பெண்ணை தாக்கிய 'ரேபிடோ' பைக் ஓட்டுநர் கைது

பெங்களூரு : பெங்களூரில் இளம்பெண்ணை தாக்கிய, 'ரேபிடோ' பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் ஷ்ரேயா என்ற இளம்பெண்ணை, 'ரேபிடோ' பைக் ஓட்டுநர் கடந்த 13ம் தேதி தாக்கிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, பைக் ஓட்டுநர் சுகாஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

ரேபிடோ பதிவு செய்த ஷ்ரேயா என்ற பெண், அலுவலகத்துக்கு வேகமாக செல்ல வேண்டும் என்று கூறினார். எனவே, பி.டி.எம்., லே - அவுட்டில் இருந்து குறுக்கு வழியில் வேகமாக ஜெயநகருக்கு சென்று கொண்டிருந்தேன். திடீரென்று, வண்டியை நிறுத்தும்படி ஷ்ரேயா கூறினார்.

வேகமாக சென்றதால், திடீரென நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தினால், பின்னால் வரும் வாகனம் மோதிவிடும் என, அப்பெண்ணின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்தினேன். இதனால் கோபமடைந்த அப்பெண், என்னை பார்த்து நீ படித்தவனா, இல்லையா என்று கூறி திட்டிக் கொண்டே இருந்தார். என்னை பேசவே விடவில்லை.

எனக்கான பணத்தை வழங்கும்படி கேட்டேன். அதை கண்டுகொள்ளாமல் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். என் காலரை பிடித்துக் கொண்டார். அப்போது நான், 'பேசிக் கொண்டிருக்கும் போது மேலே கைவைப்பது சரியல்ல' என்றேன்.

அதற்கு அப்பெண், தன் கையில் வைத்திருந்த டிபன் பாக்சால், என்னை இரண்டு முறை தாக்கினார். மீண்டும் குரலை உயர்த்தி பேசினார். என் தாடையில் அடித்தார். இதனால், நானும் அவரை தாக்கினேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதை பார்த்த ஷ்ரேயா, ஜெயநகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதில், 'நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிய பின், போக்குவரத்து விதிகளை மீறுவது சட்டப்படி குற்றம் என்றேன். இதனால் கோபமடைந்த ஓட்டுநர், பொது இடத்தில் அனைவர் முன்பும் என்னை திட்டி, தாக்கினார். ஆனாலும், எனக்கு புகார் அளிக்க விருப்பமில்லை. இந்த வீடியோவை பார்த்த என் நண்பர்கள், போலீசில் புகார் அளிக்கும்படி கூறியதால், புகார் அளித்தேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், ரேபிடோ ஓட்டுநர் சுகாஷை கைது செய்தனர். தன்னை தாக்கியதாக, ஷ்ரேயா மீது சுகாஷ் எதிர் புகார் அளித்துள்ளார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, முதலில் ஷ்ரேயா தான், சுகாஷை தாக்கியது தெளிவாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement