நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னதாராபுரம் அருகே, எலவனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நஞ்சைக்காளக்குறிச்சி, நொச்சிபாளையம் பகுதிகளில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு, இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது.

மாணவர்கள் ஊர் வழியாக கடந்த, 2015ம் ஆண்டு முதல் டவுன் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பஸ் இயக்கப்படாமல் உள்ளதாக, மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சாலை வசதி சரியாக இல்லை என கூறி நிறுத்தி விட்டதாக கூறினர். தற்போது மாணவர்கள் சின்னதாராபுரம் சென்று, அங்கிருந்து வேறொரு பஸ்சில் ஏறி எலவனுாரில் உள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.
எனவே மாணவர்கள் நலன் கருதி, சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு, சீர் செய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை, விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement