2500 கிலோ குட்கா பறிமுதல் திருச்சுழியில் 4 பேர் கைது

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீட்டில் பதுக்கிய 2500 கிலோ குட்கா மற்றும் ஷேர் ஆட்டோ, காரை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

திருச்சுழி அருகே தமிழ்பாடியில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சிறப்பு படை டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில் திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் மற்றும் போலீசார் ஷேர் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 7 மூடை குட்கா இருப்பது தெரிந்தது. பின்னால் வந்த காரை சோதனை செய்ததில் அதில் வடக்குநத்தத்தை சேர்ந்த ராஜ பூபதி,30, தொப்புலாக்கரையை சேர்ந்த அண்ணாமலை,28, பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால், 26, செம்பட்டியை சேர்ந்த முருகேசன், 25, இருந்தனர்.

ஷேர் ஆட்டோவில் கொண்டு வந்த குட்கா ராஜபூபதியின் மைத்துனரான அண்ணாமலையின் வீட்டில் பதுக்கி வைப்பதற்காக தொப்புலாக்கரை கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக போலீசார் 7 மூடை உட்பட அண்ணாமலையின் வீட்டில் பதுக்கிய மொத்தம் 2500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இவை தென்காசி மாவட்டம் கீழப்பாவூரிலிருந்து கொண்டு வரப்பட்டது. 4 பேரையும் கைது செய்த திருச்சுழி போலீசார் கார், ஷேர்ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement