ராஜா மீதான சொத்து வழக்கு வரும் 23ல் குற்றச்சாட்டு பதிவு

சென்னை: 'தி.மு.க., - எம்.பி., ராஜா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வரும், 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்' என, சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ராஜா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 2015ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

குற்றப்பத்திரிகை



விசாரணைக்கு பின், 5.53 கோடி ரூபாய் அளவுக்கு, ராஜா, கோவை, 'ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, 'மங்கள் டெக் பார்க் லிமிடெட்' நிறுவனம், ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், 'அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து, 579 சதவீத அளவுக்கு சொத்துக்கள் குவித்துள்ளனர்' என்று, கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது, தன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விபரம் உட்பட, சில ஆவணங்கள் வழங்க உத்தரவிடக்கோரி, ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளுபடி



இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.வெங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில், 'ராஜாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்கள், அவரிடமே இருக்கும்.

சாட்சி விசாரணையின்போது, அதை அவர் சரி பார்க்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவுக்காக, வரும், 23ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து, அன்றைய தினம் ராஜா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement