கொச்சி அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவு

1

மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கொச்சி அணிக்கு ரூ.538 கோடியை இழப்பீடாக வழங்க பி.சி.சி.ஐ.,க்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து கொச்சி அணியை நீக்கம் செய்து பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுத்தது. உரிய வங்கி உத்தரவாதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காததே காரணம் என்று பி.சி.சி.ஐ., விளக்கமும் அளித்திருந்தது. ஆனால், மைதான அனுமதி உள்ளிட்ட விவகாரத்தினால் மட்டுமே தாமதம் ஏற்பட்டதாக கொச்சி அணி தெரிவித்திருந்தது.

பி.சி.சி.ஐ.,யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கொச்சி அணி தொடரப்பட்ட வழக்கில் 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கொச்சி அணிக்கு ரூ.384 கோடியும். ரென்டோவஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு ரூ.154 கோடியும் என மொத்தம் ரூ.538 கோடியை செலுத்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ., மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சாக்லா, பி.சி.சி.ஐ.,யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கொச்சி அணிக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது.

மேலும், மேல்முறையீடு செய்ய பி.சி.சி.ஐ.,க்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பி.சி.சி.ஐ.,க்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement