இங்கிலாந்து சென்றார் சூர்யகுமார்

புதுடில்லி: இந்தியாவின் சூர்யகுமார், காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார்.

இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33. சமீபத்திய பிரிமியர் லீக் 18வது சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் (717 ரன்), சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். பின், மும்பை 'டி-20' லீக் தொடரில் விளையாடினார். இவரது வலது பக்க வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டது. சோதனையில் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்ன்யா' காயம் உறுதியானது. இதற்கான சிகிச்சைக்காக சூர்யகுமார், இங்கிலாந்து சென்றார். தேவைப்படும் பட்சத்தில் 'ஆப்பரேஷன்' செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''சூர்யகுமாருக்கு 'ஆப்பரேஷன்' செய்யப்படலாம். இதன் பின் பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபடுவார்,'' என்றார்.

Advertisement