'பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் 2027க்குள் மின்சார பஸ்கள் சவாரி'

பெங்களூரு: ''பன்னரகட்டா பூங்காவில் 2027ம் ஆண்டுக்குள் அனைத்து சபாரி வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும்,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் மின்சாரத்தில் இயங்கும் பஸ் சபாரியை, பெங்களூரு விகாஸ் சவுதாவில் இருந்தபடி, நேற்று காணொளி மூலம் கொடியசைத்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்தார்.

பின் அவர் பேசியதாவது:

அடுத்த நான்கைந்து மாதங்களில், தென் அமெரிக்காவில் இருந்து சிறுத்தையும், 'காபுசின்' இன குரங்கும் பரிமாறப்படும். அடுத்தாண்டு சிம்பன்சி, ஜாகுவார் சிறுத்தை, வட அமெரிக்காவின் பூமா எனும் மலை சிங்கம் உட்பட 10 வன விலங்குகள் பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு வர உள்ளன.

பன்னரகட்டாவில் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உட்பட வன விலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

22 இருக்கைகள்



தற்போது சபாரிக்கு 'டீசலில்' இயங்கும் சபாரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. காற்றில் கார்பன் கலைப்பதை தடுக்கும் வகையில், சோதனை அடிப்படையில், 22 இருக்கைகள் கொண்ட மின்சார மினி பஸ் வாங்கப்பட்டு உள்ளது. 100 கிலோவாட் பேட்டரியில் இயங்கும் இந்த வாகனம், இரண்டு மணி நேரம் 'சார்ஜ்' செய்ய வேண்டும். சார்ஜ் செய்யப்பட்டவுடன், 160 கி.மீ., அதாவது எட்டு டிரிப்கள் இயங்கும்.

தற்போது ஒரு மின்சார பஸ் இயக்கப்படும். 2027க்குள் அனைத்தும் மின்சார பஸ்களாக மாற்றப்படும். இப்பூங்காவில், மே மாதம் மட்டும், 2.85 லட்சம் சுற்றுலா பயணியர் பார்த்திருப்பது சாதனையாகும். தற்போது சிறுத்தை சபாரிக்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது.

அதுபோன்று பெரிய அளவில் கடல்வாழ் உயிரினங்கள் 'அக்வாரியம்' அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான அறிக்கை தயாரித்து, டெண்டர் அழைக்கப்படும்.

வரிக்குதிரை



சமீபத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து அச்சமடைந்து ஓடும் போது இரும்பு வேலியில் மோதி கர்ப்பமாக இருந்த வரிக்குதிரை உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளேன். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி எந்த விலங்குகளும் இயற்கைக்கு மாறான மரணம் அடையக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

Advertisement