மன அழுத்தத்தை குறைக்கும் கோலாரின் அக்ரஹாரா அணை

பெங்களூருக்கு மிக அருகில் உள்ள கோலார் மாவட்டத்தில் நிறைய டிரெக்கிங் பாயின்ட்கள் உள்ளன. பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணி செய்பவர்கள், பணி நெருக்கடி, மன அழுத்தத்தை குறைக்க டிரெக்கிங் செல்கின்றனர்.
கோலாரில் டிரெக்கிங் பாயின்ட்கள் தவிர, நிறைய பழங்கால கோவில்கள், சுற்றுலா தலங்களும் உள்ளன. இதில் ஒன்று அக்ரஹாரா அணை.
கோலார் தாலுகாவில் உள்ள சோமாபூதி அமானிகெரே கிராமத்தில் இந்த அணை உள்ளது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, இந்த அணையில் தண்ணீர் பரந்து, விரிந்து காணப்படுகிறது.
இந்த அணை பகுதியில் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் செல்ல அனுமதி இல்லை.
அணையின் ஒரு பகுதியில் இருந்து சிறிய மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர், சிறிய ஓடைகள் வழியாக பாய்ந்து செல்கிறது. நீச்சல் தெரியாத சுற்றுலா பயணியர், இந்த ஓடையில் அமர்ந்து குளித்து மகிழ்கின்றனர்.
கோலார் நகரில் இருந்து சோமாபூதி அமானிகெரே கிராமம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் பச்சை, பசேலன காட்சி அளிக்கும்.
இயற்கையின் அழகை ரசித்து கொண்டே பயணிக்கலாம். மரங்களின் பறவைகளின் கீச்.... கீச் சத்தமும் மனதை வருடும் வகையில் இருக்கும்.
அணை பகுதியில் அமர்ந்து கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தேங்கி இருக்கும் தண்ணீர், அதன் பின்னணியில் இருக்கும் பாறைகளை கண்டு ரசிக்கலாம்.
குடும்பத்தினருடன் ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்ற இடம்; மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும் இடம்; உற்சாகமாக குளித்து மகிழ ஏற்ற இடம் என்று இங்கு சுற்றுலா சென்று வந்த பயணியர் தங்கள் கருத்துகளை கூறி உள்ளனர்.
அணையை சுற்றி ஹோட்டலோ, கடைகளோ இல்லை. இதனால் வீட்டில் இருந்து உணவு எடுத்து செல்வது நல்லது. அணை பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது.
பெங்களூரில் இருந்து சோமாபூதி அமானிகெரே கிராமம் 84 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கோலாருக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அங்கிருந்து சிக்கபல்லாபூர் பஸ்சில் சென்று, சோமாபூதி அமானிகெரே கிராமத்தில் இறங்கி கொள்ளலாம். ரயிலில் சென்றால் சீனிவாசப்பூர் அல்லது கோலாரில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்
- நமது நிருபர் -.
மேலும்
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
-
தீ பந்தம் காட்டும் போராட்டம்
-
இன்று இனிதாக பொள்ளாச்சி
-
விதிமீறல் வாகனங்கள்; குறையாத நெரிசல் தளி ரோட்டில் தத்தளிப்பு