ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஜினியர் கைது

சி.வி.ராமன்நகர்: ஒப்பந்ததாரரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாநகராட்சி இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சி.வி.ராமன்நகரில் வசிப்பவர் ஹேமந்த். ஒப்பந்ததாரரான இவர், மாநகராட்சியின் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்தார். இதற்காக அவருக்கு மாநகராட்சி, 50 லட்சம் ரூபாய் விடுவிக்க வேண்டி இருந்தது.

மாநகராட்சி இன்ஜினியர் யாரப்பா ரெட்டியிடம், பில்களை சமர்ப்பித்து தொகை விடுவிக்கும்படி கேட்டார். பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பில் தொகை விடுவிப்பதாக யாரப்பா ரெட்டி கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹேமந்த், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். அவருக்கு சில ஆலோசனை கூறிய லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., சீனிவாச மூர்த்தி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்.

நேற்று மதியம் யாரப்பா ரெட்டி கூறிய இடத்தில், ஹேமந்த் சந்தித்தார். லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், யாரப்பா ரெட்டியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement