சித்தாபுராவில் 90 அடி நீர்வீழ்ச்சி

உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியின் சித்தாபூரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் புருடே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கர்நாடகாவின் அக்னாஷினி என்ற பெரிய நதியின் இல்லிமனே என்ற துணை நதியில் இருந்து உருவானதால், இதை 'இல்லிமனே நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கின்றனர்.
இங்கு இயற்கையான சூழலில் அமைந்துள்ள அருவியை பார்த்து, கண்களை மூடியபடி காட்டின் அமைதியையும், உள்ளூர், வலசை வந்த பறவைகளின் மெல்லிசைகளையும், பாயும் நீரின் சத்தத்தையும் கேட்டு மகிழ்வதோடு, மூடுபனியையும் ரசிக்கலாம்.
ஒரு காலத்தில் யாரும் வராத இந்த நீர்வீழ்ச்சிக்கு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியரும், மலையேற்ற ஆர்வலர்களும் வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சி, சாகச விரும்பிகளுக்கு நல்ல தீனியாக இருக்கும். 90 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, படிக்கட்டு போன்று ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும், சிறிய குளம் அமைந்து உள்ளது. நீர்வீழ்ச்சியில் நீராடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இங்கு மலையேற்றம் மட்டுமின்றி, பறவைகளை பார்ப்பதுடன், ஓய்வெடுக்கவும், இயற்கையின் மடியில் தவழவும், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தங்கும் வகையில் திட்டமிடுங்கள்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் புருடே நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட துாரம் வரை மட்டுமே வாகனத்தில் செல்ல முடியும். அதன் பின், அங்கிருந்து சிறிது துாரம் நடந்து செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்த்தும் வகையில், ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் சத்தம் கேட்கும்.
வனத்துறை சார்பில் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதிக்கு செல்ல குறிப்பிட்ட துாரத்துக்கு படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். அதன் பின் செங்குத்தாக இறங்கும் பகுதியில் நாம் ஜாக்கிரதையாக இறங்க வேண்டும். குடும்பத்தினருடன் இங்கு செல்வதை விட, நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களுடன் செல்லலாம்.
கீழே இறங்கி நீர்வீழ்ச்சியை பார்த்தால், 90 அடி உயரத்தில் இருந்து படிக்கட்டுகளில் இருந்து விழுவது போன்று தோன்றும். மற்ற நீர்வீழ்ச்சிகளை போன்று, மழைக் காலத்துக்கு பின் புருடே நீர்வீழ்ச்சியை பார்ப்பது நல்லது.
அக்டோபர் முதல் ஜனவரி வரை வானிலை இனிமையாகவும், அருவிகள் ஆர்ப்பரிப்பதாகவும் இருக்கும் போது, சிறப்பாக அனுபவிக்க முடியும்.
காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். மழைக் காலத்தில் செல்வதை தவிர்க்கவும். அந்நேரத்தில் இப்பகுதியில் சேறும், சகதியுமாக இருக்கும். நீர்வீழ்ச்சியில் குளிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இங்கு அட்டைப்பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்கவும்.
பொருத்தமான காலணிகள், ஆடைகள் அணியுங்கள். மலையேற்றம் நீண்ட துாரமாகவும், கடினமாகவும் இருக்கும். எனவே, உணவு, தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். தனியாக பயணம் செய்யவோ, மலையேறவோ வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஆப்பரேட்டர்களுடன் பயணம் செய்வது நுல்லது. இப்பகுதியில் இணையதளம், தொலைபேசி இணைப்பு சரியாக கிடைக்காது.
19_Article_0001
90 அடி உயரத்தில் இருந்து கொட்டும் புருடே நீர்வீழ்ச்சி.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 228 கி.மீ., சாலை வழியாக பஸ் அல்லது டாக்சியில் செல்லலாம்.ரயிலில் செல்வோர், ஷிவமொக்கா ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் 128 கி.மீ., பயணித்து செல்லலாம்.பஸ்சில் செல்வோர், சித்தாபூர் செல்ல வேண்டும். அங்கிருந்து 26 கி.மீ., தொலைவில் உள்ள அருவியை, 35 நிமிடத்தில் சென்றடையலாம். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், சொந்த வாகனத்தில் செல்வதே சிறந்தது.
- நமது நிருபர் -
மேலும்
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை