3 மாத சம்பளம் தரவில்லை பணியாளர்கள் முற்றுகை
ராயபுரம், ராயபுரம் மண்டலத்தில் துாய்மை பணி மேற்கொள்ள, ஒப்பந்த அடிப்படையில், 120 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த சப் - கலெக்டர் முருகானந்தம் தலையிலான அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் பேசி, நிலுவை சம்பளத் தொகையை உடனே வழங்கும்படி தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில், 2024 டிசம்பரில் 120 பேரை வேலைக்கு எடுத்தனர். சுழற்சி அடிப்படையில் துப்புரவு பணி வழங்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் வரை, ஐந்து மாதங்களுக்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்ட நிலையில், 8,500, 10,500 ரூபாய் மட்டுமே, ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது, மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.