கொங்கு மண்டல ஞானரத யாத்திரை

அவிநாசி: கொங்கு மண்டல ஞானரத யாத்திரை மேற்கொண்டு, அவிநாசிக்கு நேற்று வந்த தருமபுரம் ஆதினத்துக்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீஸ்ரீ குருகுலம் வேத விஞ்ஞான மஹா வித்யாபீடம் சார்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தலபுராணம் மீள் பதிப்பு 'அரிய பொருளே அவிநாசியப்பா' என்ற தலைப்பில் வெளியீட்டு விழா நாளை நடக்கிறது.

இதனை வெளியிட, நேற்று மாலை அவிநாசிக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் 27வது குரு மஹா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை புரிந்தார்.

இதை முன்னிட்டு, அவிநாசி, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஸ்ரீ சரவண மஹாலில் நடைபெறும் செந்தமிழ் சொக்கநாதர் சிவபூஜையை இன்று காலை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சி தாச சுவாமி தலைமை வகித்தார். முன்னதாக, தருமை ஆதினத்தை, ஸ்ரீஸ்ரீகுருகுல பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம், அவிநாசி கோவில் சிவாச்சார்யர் தியாகராஜ சிவம் மற்றும் பாடசாலை மாணவர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆதினம் அருளாசி வழங்கினார்.

Advertisement